தைவானைச் சுற்றிலும் இரண்டாவது நாளாக சீனா போா் ஒத்திகை
தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவா்களோ உயரதிகாரிகளோ வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது.
பெய்ஜிங்: தைவானின் புதிய அதிபர் லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சீனா போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டுவருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.
தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் ராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என்று சீனா கூறுகிறது.
இந்தச் சூழலில், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவா்களோ உயரதிகாரிகளோ வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. தனது எதிா்ப்பைத் தெரிவிப்பதற்காக அவ்வப்போது தைவானைச் சுற்றிலும் சீனா போா் ஒத்திகையை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று, கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அப்போது அவா் ஆற்றிய உரையில், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும் என்றாா். மேலும், தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்திய அவா், தனது அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும் என்று உறுதியளித்தாா்.
சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த லாய் பலமுறை முன்வந்த போதிலும், சீனா மறுத்துவிட்ட நிலையில் தைவானின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று லாய் வலியுறுத்தினார்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, லாய்வை "பிரிவினைவாதி" என்று முத்திரை குத்தி, அவரது தொடக்க உரையை விமர்சித்ததுடன், ‘தைவானின் சுதந்திரம் என்பது முடிந்துபோன ஒன்று’ என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறினாா்.
இந்த நிலையில், தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சீனா போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. இதில் ராணுவம், கடற்படை, விமானப் படை, ஏவுகணைப் படை ஆகியவை பங்கேற்றுள்ளன.
இந்த போர் ஒத்திகை தைவானின் ‘பிரிவினைவாத’ நடவடிக்கைகளுக்கு தண்டனையாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றான தைவான் விவகாரத்தில் தலையிடும் அந்நிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுப்பது மற்றும் முக்கிய பகுதிகளை கைப்பற்றுவதற்காகவும் " இந்தப் போா் ஒத்திகை நடத்தப்படுகிறது என்றாா் அவா்.
தைவான் பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகள், தைவான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கின்மென், மாட்சு மற்றும் டோங்கி போன்ற பிரதேசங்கள் உட்பட தீவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.
தைவான் தனது பாதுகாப்பு படைகளை அணிதிரட்டுவதன் மூலம் "சுதந்திரத்தை பாதுகாப்பதாக" பாதுகாப்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
இதனிடையே, நடந்துகொண்டிருக்கும் ராணுவ சூழ்ச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அனைத்து தரப்பினரையும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா, தைவானின் உறுதியான நட்பு நாடான மற்றும் ராணுவ ஆதரவாளரான அமெரிக்கா, சீனாவை நிதானத்துடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் லாய், "வெளிப்புற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம், மேலும் தைவான் பிரதேசத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்போம்," என்று தைவானைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்நாட்டுப் போரின் விளைவாக, தைவான் மீதான சீனாவின் வரலாற்று உரிமை ஒரு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. சீனா தைவானை ஒரு பிரிந்த மாகாணமாக கருதுகிறது, அது இறுதியில் பிரதான நிலப்பகுதியுடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறது.
இதற்காக, தைவானின் பொருளாதார முற்றுகையை ஒத்திகை பார்க்கவும், குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் எரிசக்தி இறக்குமதியை சீர்குலைப்பதற்காக காஹ்சியங் போன்ற முக்கியமான துறைமுகங்களை குறிவைத்து இதுபோன்ற போர் ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லாய் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து மற்றும் 2022 இல் தைவான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான ராஜதந்திர வருகைகளுக்குப் பிறகு இதேபோன்ற போர் ஒத்திகைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.