இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினர் அஜய் மேகென் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கார்கே நேருவை ‘இந்தியாவின் அணிகலன்’ என்று குறிப்பிட்டு நாட்டின் வளர்ச்சியில் அவருடைய எண்ணற்ற பங்களிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார்.
மேலும், “நவீன இந்தியாவின் முக்கியச் சிற்பியாக நேரு விளங்கினார். அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை, போன்றவற்றின் மூலம் நாட்டை அவரது முயற்சியால் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றார். நேர்மையான ஜனநாயகத்தின் பாதுகாவலனாக விளங்கினார்.
நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், ஒற்றுமை, அனைவருக்கும் சமவாய்ப்பு போன்றவயே நமது கடமையாக இருக்க வேண்டும். மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை நேரு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நாட்டில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழையாகவும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நேரு முன்வைத்த சட்டத்தின் நேர்மையான பாதையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் செல்லும்” என்று கார்கே கூறியுள்ளார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஜவஹர்லால் நேரு 1947-ல் சுதந்திரம் கிடைத்த பின் நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
16 ஆண்டுகள் பதவியில் இருந்த நேரு மே 27, 1964-ம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.