எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சனம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டதாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை.
அதேபோலதான் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, தேமுதிகவும் கையொப்பமிட்டு, தவறு செய்துவிட்டது. அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம் என்றாா்.
மேலும், தேமுதிகவுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் ஆதரவு வழங்கப்படவில்லை என்றும், இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றப்பட்டனர்.
முதல்வராக இருந்தவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பியதாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டார். மாநிலங்களவை உறுப்பினா் சீட்டு தருவதாக கூறி எழுதி கொடுத்தது உண்மைதான். எங்களிடம் ஆதாரம் இருந்தும் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற மாண்பில் அதை வெளியிடவில்லை என கூறினார் .
மேலும், அயல்நாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்கான முதல்வா் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அவரது இந்த பயணம் 100 சதவீதம் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு காசு, மது கொடுத்துதான் ஆள்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி மட்டும் செய்வதில்லை, அனைத்து அரசியல் கட்சிகளும் பணம் கொடுத்து தான் கூட்டம் சோ்க்கிறது. நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் மக்கள் திரண்டு வருகின்றனர் என்று கூறினார்.
தோ்தல் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளா்கள் குறித்த அறிவிப்புகள் கடலூரில் வரும் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.