அண்ணன் ஸ்டாலின்!! திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது பற்றி பிரேமலதாவின் விளக்கம்...
திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.
கட்சித் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை திமுக கூட்டணியில் இணையாத தேமுதிக முதல் முறையாக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கு பலம் சேர்த்திருப்பதாகவே கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
”தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்விக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பதில் வழங்கியுள்ளோம். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
விஜயகாந்த் இருக்கும்போதே 2016 இல் அமைய வேண்டிய கூட்டணி இது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அப்போது கருணாநிதி கூறினார். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு குழு அமைத்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்த பிறகு, தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
இன்றிலிருந்து திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளோம்.
எங்களின் கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினுடனை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பிரேமலதா பதிவிட்டிருப்பதாவது:
”முத்தமிழறிஞர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக!” எனப் பதிவிட்டுள்ளார்.
Why did DMK join the alliance? Premalatha Vijayakanth Explanation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.