முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக...

Updated On : 18 டிசம்பர் 2025, 12:35 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலின் |அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - IANS
பகிர்:

விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே! ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு, "விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி" என மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை 60:40 ஆக மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது.

Advertisement

Advertisement

அதாவது இந்த திட்டத்திற்கான நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

இப்படி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்த புதிய மசோதாவிற்கு, வழக்கம்போல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவு குரல் கொடுத்து இருக்கிறார். இவரது மக்கள் விரோத செயலுக்கு, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

"VBGRAMG (விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி) திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பாஜக ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

தற்போது, மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

திட்டச் செலவில் 40 சதவீதம் தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்! என கூறியுள்ளார்.

summary

The central BJP government is attacking the livelihoods of the poor; and Palaniswami is supporting them Chief Minister Stalin condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.