முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர்,

Updated On : 26 ஜனவரி, 2025 at 11:17 AM
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானாவில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டம் வரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற கனரக லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பயணிகளை ஏற்றிச் சென்ற கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது சரிந்து விழுந்தது. இதில் கார், ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்தவர்கள் மீது இரும்பு கம்பிகள் குத்தியதில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மம்னூர் ஏசிபி பி. திருப்பதி, காவல் ஆய்வாளர் ஓ. ரமேஷ் மற்றும் போலீசார், மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த இரும்பு கம்பிகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், பூஜா, கிரண் மற்றும் முகேஷ் ஆகியோர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மது போதையில் ஓட்டுநர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணம் என விபத்து நடத்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →