குடியரசு நாள்: தில்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!
தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
குடியரசு நாளையொட்டி தில்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், புது தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் கொடியேற்றுவதற்காக தில்லி ராஜபாதையில் வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர், குடியரசுத் தலைவர் கொடியேற்றினார்.
இதையும் படிக்க: குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநா் ஆா்.என். ரவி!
குடியரசு நாள் விழாவில் இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியன்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கருப்பொருள்: நிகழாண்டு குடியரசு நாள், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையிலும் கொண்டாடப்படப்பட்டு வருகிறது.
அதற்காக, ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.
அவற்றோடு, மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகளின் 15 அலங்கார ஊா்திகளும் இடம்பெற உள்ளன.