கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!
கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி...
கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), மகன் செழியன்(15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து விபத்தில் பலியான மாணவர்களின் உடல் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று, மாணவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.