வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை திட்டமிட்டபடி நாளை தொடங்காது!
வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து...
பரங்கிமலை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்) தண்டவாள பாதுகாப்பு சான்று கிடைக்காததால், திட்டமிட்டபடி நாளை (மார்ச் 10) ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உயர்நிலை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 100 ரயில் சேவைகளில் சுமார் 1 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 4.5 கி.மீ. தொலைவுக்கு அந்த ரயில் சேவையை நீட்டிக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு உள்ளிட்டவற்றால் பணிகள் முடங்கியிருந்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது அந்தப் பாதையில் 167 தூண்கள் அமைத்து ரயில் பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது. அதில் மின்சார இணைப்பும் தரப்பட்டுள்ளது. தண்டவாள உறுதித் தன்மையை பரிசோதிக்க என்ஜின் வெள்ளோட்டமும் நடைபெற்றது.
இதனிடையே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் புறநகர் மின்சார ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கூட்ட நெரிசல், பயண தாமதத்தைத் தவிர்க்க பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த பரிசோதனை ஓட்டம் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமாா் கர்க் தலைமையில் குழுவினர் ரயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நாளை(மார்ச் 9) முதல் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், ரயிலை இயக்க அனுமதிச் சான்று கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தண்டவாளப் பாதையில் சில பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்த பிறகே இந்தப் பாதையில் ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய சோதனையில், சில மாற்றங்கள் செய்யக் கூறியதால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.