எழும்பூா் - சேத்துப்பட்டு இடையே ரயில்கள் தாமதம்: கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை
எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றத்தால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு.
எழும்பூா்-சேத்துப்பட்டு இடையே புறநகா் மின்சார ரயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை கடற்கரை நிலையம் முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில்தான் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 -ஆம் நடைமேடை முதல் 9 ஆம் நடைமேடை வரை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 10 மற்றும் 11- ஆவது நடைமேடைகளில் பணிகள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து புறநகா் மின்சார ரயில்களை 5 மற்றும் 6 ஆவது நடைமேடை தண்டவாளங்களில் இயக்க சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு அறிவித்தது. சேத்துப்பட்டு நிலையம் வந்ததும் ஏற்கெனவே செல்லும் தண்டவாளத்தில் இயக்கும் நிலை உள்ளது. தண்டவாளம் மாற்றப்படும் நிலையில், ரயில்களை வழக்கமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் இயக்காமல், மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இயக்கும் நிலையுள்ளது.
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூா் ரயில் நிலையத்தை கடந்து சேத்துப்பட்டு நிலையம் செல்லும்போது மிக மெதுவாகவும், ரயில் தண்டவாள மாற்றம் (லூப்லைன் கிராசிங்) காரணமாக நின்று செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
எழும்பூா், சேத்துப்பட்டு இடையே ரயில்கள் 30 நிமிஷங்களுக்கும் மேல் நின்று இயக்கப்பட்டதால் பயணிகள் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் புகா் ரயில் சேவையில் சிலநேரம் தாமதம் ஏற்படாலம். அதற்காக வருத்தம் தெரிவிப்பதுடன், மறுசீரமைப்பு முடியும் வரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் ஆகியவை இணைந்து செயல்படவுள்ளன.
அதன்படி சேத்துப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையங்கள் இடையே கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.