முகப்பு
தற்போதைய செய்திகள்

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானில் 6 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

Updated On : 27 மார்ச், 2025 at 10:11 AM
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்து வந்த பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல், பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து வந்த 5 பேரை பேருந்திலிருந்து கீழே இறக்கி அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அவர்கள் 5 பேரும் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு பயணியும் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலியானோரது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்து அவர்களை சுட்டுக்கொன்ற நபர்கள் மேலும் 3 பேரை கடத்தி சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் பஞ்சாப் மாகாண மக்களைக் குறிவைத்து பலூச் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக கண்டனம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் முதல்வர் ஷர்ஃபராஸ் புக்தி, அப்பாவி பயணிகளை தங்களது அடையாளத்தின் அடிப்படையில் கொலை செய்திருப்பது கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தானில் ஜாஃபர் விரைவு ரயிலை சிறைப்பிடித்து பலூச் லிபரேஷன் ஆர்மியின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர், மறுநாள் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பலூசிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்...போராடும் வீரர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.