சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள், பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்குதல், சுயதொழில் தொடங்கிட மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஆகியவற்றினை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.
அப்போது, தூய்மைப் பணி என்பது வேலை அல்ல சேவை. சென்னையில் இரவு பயணம் செய்பவர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள், ஊரே உறங்கிய பின்பும் ஓய்வு அறியாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான். உங்களால்தான் சுகாதாரமான சுற்றுச்சூழல் உள்ளது.உங்களது இந்த அர்ப்பணிப்பும் சேவை உணர்வும் இந்த மாநகரத்துக்கு பெருமை சேர்க்கிறது. அதனால்தான் சென்னை நகரமே உங்களை நன்றியுடன் வணங்குகிறது. அதனால் தான் உங்களது நலனை காக்கும் வகையில் இலவச உணவு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ரூ.186.94 கோடி செலவில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 29,455 தூய்மைப் பணியாளர்கள், பூங்கா ஊழியர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது.
சென்னையில் தொடங்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் ஆறாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும்.
சென்னையில் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டப்படும்.
தூய்மைப் பணியாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் மக்கள் சுய ஒழுக்கத்துடன் குப்பைகளை உரிய இடத்தில் போடவும் முன்வர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.