வாழப்பாடி: கல்வராயன் மலை கருமந்துறை அருகே, நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிராங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவர் இப்பகுதி திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு சரிதா(40) என்ற மனைவியும் கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும் நவீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
திமுக பிரமுகர் ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராஜேந்திரன் தனது மனைவி சரிதாவுடன் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கல்வராயன் மலை கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீசார், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சந்தேகிக்கும் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறில் திமுக பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கல்வராயன் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.