இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொலை!
இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
உலகம்இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொலை!
இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
இராக்கில், பிரபல பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இராக் நாட்டைச் சேர்ந்தவர் பிரபல மனித மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் யானார் முகமது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காக ஆர்கனைஸேஷன் ஆஃப் வுமன்ஸ் ஃபிரீடம் இன் இராக் எனும் அமைப்பை நடத்தி வந்தார்.
இந்த அமைப்பின் மூலம் இராக்கில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் தேவையான உதவிகளை யானார் முகமது செய்து வந்துள்ளார். இதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை நார்வே அரசு அவருக்கு வழங்கியது.
இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் கடந்த மார்ச் 1 அன்று காலை 9 மணியளவில் யானார் முகமதை அவரின் வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த யானார் முகமது உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, இராக்கில் மனித மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல கல்வியாளர் ஹிசாம் அல் - ஹஷேமி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.