கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!
கருமத்தம்பட்டி காங்கிரஸ் நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் அதிமுகவில் இணைந்தது குறித்து...
கருமத்தம்பட்டி காங்கிரஸ் நகராட்சி துணைத் தலைவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர முடிவெடுத்தனர்.
இந்த நிலையில், இருகூர் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தற்போதைய திமுக நகராட்சித் தலைவர் நித்யா மனோகரனின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர் மீது நீண்ட நாள்களாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்துக் கொண்டது கருமத்தம்பட்டி பகுதி காங்கிரஸ் கட்சியினரிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.