மார்ச் 1-ல் தவெக செயல் வீரர்கள் கூட்டம்
தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (மார்ச்.1) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சி தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (மார்ச்.1) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கட்சியின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, தலைவர் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.