பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பியதும் போர் தொடங்கியது! - காங்கிரஸ் எம்.பி.
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகுதான் ஈரான் போர் தொடங்கியது என காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளது குறித்து...
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகுதான் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கியது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று (மார்ச் 9) தொடங்கியிருக்கும் நிலையில், மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பிடிஐ-க்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், “மேற்கு ஆசியா பற்றி எரிவது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் பிரதமர் மோடி மௌனம் காக்கின்றார். அவர் மேற்கு வங்கத் தேர்தலில் தீவிரமாக உள்ளார். மோடி அரசில் உள்ள பெரிய பிரச்னை உலகளாவிய நிலைமையைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. மோடி இஸ்ரேலுக்குச் சென்று வந்தார். ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கத் தொடங்கியது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகும் இந்தியாவிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. நாடாளுமன்றம் வெறும் அறிவிப்புப் பலகை அல்ல. ஆகையால் மேற்காசிய சிக்கல் குறித்து தெளிவாக விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்காசியப் போர் பற்றியும் அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தது பற்றியும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.