வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று 'கர்மா சவுத்'. கணவனின் நன்மைக்காக மனைவி விரதம் மேற்கொள்ளும் திருவிழா. தமிழகத்தில் காரடையான் நோன்பு அல்லது சுமங்கலி விரதம் என்று கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் இவ்விரதத்தையொட்டி, பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
மேலும் இதன் மூலமாக கணவன்-மனைவி இடையே ஒற்றுமை கூடும். கணவனுக்கு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் உண்டாகும் என்பதால் இதனை இந்து பெண்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதத்தில் பூர்ணிமாவுக்கு அடுத்த நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்து, பின்னர் சிறந்த ஆடைகள், ஆபரணங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக்கொள்கின்றனர். பல பெண்கள் இந்நாளில் தங்களை சிறப்பாக அலங்கரிக்க அழகு நிலையங்களை நாடுவர். ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் திருவிழா சற்று கலையிழந்துள்ளது என்றும் கூறலாம்.