முகப்பு
செய்திகள்

கோடையில் உடல் உஷ்ணத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.இந்த நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2021 at 12:21 PM
பகிர்:

பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. உடல் உஷ்ணம் அடைவதால் இந்த நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கோடை காலத்தில் எப்படி நிலத்தில் வறட்சி ஏற்படுகிறதோ அப்படியே மனித உடலிலும் வறட்சி ஏற்படுகிறது. நிலத்தின் வறட்சியைத் தடுக்க நீர் ஊற்றுவது போல உடல் வறட்சியைப் போக்க உடலின் நீர் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள அதற்கேற்ப உணவு வகைகளை எடுத்துக்கொள்வது அவசியம். 

கோடை வெயில் நம் உடல்நலனை பாதிக்காத அளவுக்கு அனைவரும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

Advertisement

தண்ணீர்

பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஒரு அளவு கூறப்படுகிறது. ஆனால், வெயில் காலத்தில் கண்டிப்பாக இது போதாது. குறைந்தது 5 லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல்வேறு உடலியல் கோளாறுகள் ஏற்படுகின்றன. 

எலுமிச்சைச் சாறு 

கோடை வெயிலில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உப்பு கலந்து எலுமிச்சைச் சாறு அருந்த வேண்டும். தண்ணீர் தாகத்தையும் குறைக்கும். 

இளநீர் 

கோடைக் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்காததாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பலரும் சிறுநீர் கடுப்பால் அவதிப்படுவர். வெயில் காலத்தில் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு இளநீர் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

நீர் மோர் 

உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதனை சரிசெய்யவும், வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை நீக்க நீர்மோர் மருந்தாக பயன்படுகிறது. 

பழங்கள் 

பழங்களைப் பொருத்தவரை தர்பூசணி, கிர்ணி, பப்பாளி பழத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் பழச்சாறுகள் இரு மடங்கு நன்மையைத் தருகின்றன. 

காய்கறிகள் 

வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பரங்கிக்காய், கோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் உடலுக்கு சக்தியை கொடுக்கும். அதேபோன்று கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி தழை, துளசி போன்றவை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். 

சீரகம், வெந்தயம் 

வெந்தயம் உடலுக்கு நன்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. வெயில் காலத்தில் தினமும் காலை வெந்தயத்தை ஊற வைத்த நீரை அருந்துவது உடல் வெப்பத்தைக் குறைக்கும், வயிற்று கோளாறுகளை நீக்கும். 

அதேபோன்று சாதாரண தண்ணீருக்கு பதிலாக சீரகம் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.