'55% இந்தியர்கள் வாரத்தில் 3 நாள்கள் சரியாகத் தூங்குவதில்லை' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் வயது வந்தோர்களில் 55% பேருக்கு வாரத்தில் 3 நாள்கள் தூங்குவதில் பிரச்னை உள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வயது வந்தோர்களில் 55 சதவீதம் பேருக்கு வாரத்தில் 3 நாள்கள் தூங்குவதில் பிரச்னை உள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ரெஸ்மெட் மற்றும் லத்தீன் அமெரிக்க ஸ்லீப் ஹெல்த் ஹெல்த் சர்வே இதுகுறித்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பிரேசில், சீனா, ஜப்பான், இந்தியா, கொரியா, மெக்சிகோவில் உள்ள மக்களிடையே ஆன்லைனில் நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் போதுமான தூக்கமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் 21 சதவீதம் பேர் மட்டுமே காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதாகக் கூறியுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 17,040 பேரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5,004 பேர்.
தூக்கமின்மை ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த தூக்கம் முக்கியமானது என்று இந்தியாவைச் சேர்ந்த 81 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டனர். 53 சதவீதம் பேர் இதனை சரிசெய்ய முயற்சி எடுப்பதாகவும், ஆனால் அவர்களில் 24 சதவீதம் பேர் மனநிலை மாற்றங்களாலும் 21 சதவீதம் பேர் பகலில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
'இரவு தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் ஒருவரின் வாழ்வில் தூக்கத்தின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக இந்த கணக்கெடுப்பை நடத்தினோம்' என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவின் ரெஸ்மெட்டின் துணைத் தலைவர் கார்லோஸ் மான்டீல் கூறினார்.
தூக்கத்தை மேம்படுத்த முயற்சிக்கும் மக்கள்
தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள், நன்றாக தூங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பயனில்லை என்று கூறுகின்றனர்.
அதில், இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 72 சதவீதம் பேர் போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம் அவர்களின் உணர்ச்சி நிலையை மோசமாக்கியதாகக் கூறுகின்றனர்.
இந்தியாவில் உள்ள மக்கள், வாழ்க்கைத் தரம் பாதிக்காமல் இருக்க, தூக்கத்தை மேம்படுத்த தயாராக உள்ளனர். 81 சதவீதம் பேர் மோசமான தூக்கப் பழக்கம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
34 சதவீதம் பேர் குறட்டை என்பது மோசமான இரவுத் தூக்கத்தின் அறிகுறி என்றும்59 சதவீதம் பேர் குறட்டை நல்ல தூக்கத்தின் அறிகுறி என்றும் நம்புகின்றனர்.
இதன் விளைவாக பதிலளித்தவர்களில் 51 சதவீதம் பேர் தூக்கப் பதிவுகளை வைத்து ஸ்லீப் டிராக்கர்களைப் பயன்படுத்துகின்றனர். 35 சதவீதம் பேர் தூக்கத்தின்போது தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தூக்கமின்மை பிரச்னையால் இத்தனை பேர் அவதிப்பட்டாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே இதுதொடர்பாக மருத்துவர்களை அணுக உதவி கோரியுள்ளனர்.
தூக்கமின்மையால் ஏற்படும் முதல் மூன்று அறிகுறிகளாக எரிச்சல் அல்லது மனச்சோர்வு, தலைவலி மற்றும் அதிக பகல்நேர தூக்கம் ஆகியவையால் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். இந்த அறிகுறிகள் ஆண்கள், பெண்கள் என்ற இரு பாலினத்தவரிடமுமே காணப்படுகின்றன.
80 சதவீதத்துக்கும் அதிகமான பெரியவர்களிடம் ஏற்படும் 'தூக்கத்தின்போது மூச்சுத்திணறல்' குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை உள்ளிட்ட தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளன.
இதையும் படிக்க | காளான் சாப்பிடுவது ஆபத்தா? பக்க விளைவுகள் என்னென்ன?