ஜல்லிக்கட்டு: ஜன.9-இல் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு: ஜன.10 முதல் 13 வரை கரோனா பரிசோதனை
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள்
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள் பதிவு செய்யும் பணி ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் முறையே ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு ஜனவரி 9 ஆம் தேதியும், காளைகளுக்கான பதிவு ஜனவரி 11 ஆம் தேதியும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறுகிறது.
Advertisement
இந்த பதிவுக்கு வரும் மாடுபிடிவீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 3 ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். பதிவு செய்த மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், உதவியாளா்களுக்கு அவனியாபுரத்தில் ஜனவரி 10, 11 ஆம் தேதிகள், பாலமேட்டில் ஜனவரி 11, 12-ஆம் தேதிகள், அலங்காநல்லூரில் ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் பதிவு நடைபெற்ற அதே பள்ளிகளில் கரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த இடங்கள் தவிர, அரசின் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்களில் பெறப்படும் சான்றிதழ்களும் ஏற்றுக் கொள்ளப்படும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள், மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.