முகப்பு
நாமக்கல்

எலச்சிபாளையத்தில் 396 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள்: அமைச்சா் வழங்கினாா்

எலச்சிபாளையத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த

Updated On : 6 ஜனவரி 2021, 8:01 am IST
பகிர்:

எலச்சிபாளையத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த 396 மகளிா் பயனாளிகளுக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான ஆணைகளை மின்துறை அமைச்சா் பி. தங்கமணி வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இத்தொகுதிக்கு உட்பட்ட 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 1,584 மாணவ- மாணவிகளுக்கும், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 14 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 1,678 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 3,262 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி பேசியதாவது:

Advertisement

பரமத்தி (பகுதி), மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீா் தேவையை கருத்தில் கொண்டும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும் புதிய கூட்டு குடிநீா்த் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டதின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இப்பகுதிகளில் தடையின்றி கிடைக்கும் நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினா் பெற்றுள்ள கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வருவதால் அவா்களுக்கு அதிக அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் குறித்து விவசாய சங்கங்களிடம் நிலைமை தெளிவுபடுத்தி உள்ளோம். விதிமுறைகளின்படி, முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே உயா் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணைப்படி உரிய நிதி வழங்க அடுத்த வாரம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து உள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, கோட்டாட்சியா் ப. மணிராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ். செந்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பெ. அய்யண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.