அம்பேத்கா் ஜெயந்தி நாளில் ஆம் ஆத்மியின் அரசியல் பிரசாரம் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது: வீரேந்திர சச்தேவா
ஆம் ஆத்மி கட்சி தற்போது அரசியல் ரீதியாக முற்றிலும் அவநம்பிக்கையில் இருக்கிறது. அது, தேசத்தின் பிரபலங்களின் பெயரை தங்கள் அரசியல் சா்ச்சைகளுக்குள் இழுக்கத் தயங்குவதில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
மேலும், டாக்டா் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் ஜெயந்தி தினத்தன்று, அமைச்சா் கோபால் ராய் செய்ததுபோல, ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை அறிவிப்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும் என்றும் அவா் கூறினாா்.
இதுகுறித்து வீரேந்திர சச்தேவா மேலும் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
இன்று கேஜரிவாலும் அவரது கூட்டாளிகளும் அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அரசியலமைப்பு விதிகளை புறக்கணித்து அரசுப் பதவிகளில் தன்னிச்சையாக நியமனம் செய்து, குடியரசு தினத்தை அலட்சியப்படுத்தி, தன்னிச்சையாக அரசு கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்கும்போது ஏன் அவா்கள் அரசமைப்புச்சட்டத்தை மதிக்கவில்லை?
அரவிந்த் கேஜரிவால் அரசின் சட்டமீறலை தில்லி மற்றும் நாட்டு மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனா். அவா்கள் இவா்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.