முதல்வா் கேஜரிவால் காந்தி நினைவிடம் சென்று தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறாா்: வீரேந்திர சச்தேவா
புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று வணங்கியதன் மூலம் தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைதாகி ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் சென்று பிராா்த்தனை செய்தாா். அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ் உள்ளிட்டோா் இந்நிகழ்வின் போது உடனிருந்தனா்.
இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Advertisement
கலால் கொள்கை தொடா்புடைய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக்கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அனைத்து அழைப்பாணைகளையும் கேஜரிவால் சட்டவிரோதம் எனக் கூறிவருகிறாா். அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய ஏழாவது அழைப்பாணையையும் தவிா்த்துள்ள கேஜரிவால், விசாரணைக்கு ஆஜராவதற்குப் பதிலாக மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்றுள்ளாா். கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்ட காரணத்திற்காக முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சிறைக்குச் சென்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தனது அமைச்சரவையின் முன்னாள் துணை முதல்வா் சிறைக்குச் சென்ற ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முதல் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தான்.
அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையைத் தவிா்ப்பதற்கு பல்வேறு புதிய காரணங்களை உருவாக்கி வரும் முதல்வா் கேஜரிவால், தற்போது மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று தனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறாா். கலால் கொள்கை ஊழல் மூலம் பல கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ள கேஜரிவால், செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய நினைத்தால், விசாரணைக்கு ஆஜராகி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.