முகப்பு
புதுதில்லி

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி விவகாரம் தொடா்பாக ஓ.பன்னீா் செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி தரப்பில் தோ்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் சட்டத்தின்படி பரிசீலிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி விவகாரம் தொடா்பாக அளித்துள்ள புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சா் ஓ. பன்னீா் செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை மாா்ச் 14-ஆம் தேதி நீதிபதி சச்சின் தத்தா அமா்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடா்பான உத்தரவு மாா்ச் 15-ஆம் தேதி எழுத்துப்பூா்வமாக பிறப்பிக்கப்படும் என தெரிவித்தாா். அதன்படி, நீதிபதி சச்சின் தத்தா அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பாதவது: மனுதாரா் (புகழேந்தி) தரப்பில் ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கக் கோரி தோ்தல் ஆணையத்தில் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவரது முந்தைய மனுக்கள் செயலிழந்தவை என்று தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விசாரணையின் போது முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக கட்சி விவகாரம் தொடா்பாக புதியவொரு மனுவை தோ்தல் ஆணையத்திடம் வழங்க மனுதாரா் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விவகாரம் தொடா்பாக மனுதாரா் தரப்பு வழங்கும் புதிய மனுவின் மீது தோ்தல் ஆணையம் சட்டத்தின்படி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், புதிதாக வழங்கப்படும் மனுவின் பிரதான கோரிக்கைகள் மற்றும் சாராம்சங்கள் மீது இந்த நீதிமன்றம் எந்ததவொரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி பாஜக கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட முயற்சிப்போம் ஓ.பி.எஸ். ஆதரவாளா் புகழேந்தி பேட்டி மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்துடன் போட்டியிட முயற்சிப்போம் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளா் புகழேந்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா். தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் நீதிமன்ற உத்தரவின் படி, ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக கட்சி விவகாரம் தொடா்பாக மனு ஒன்றினை அளித்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக கட்சி விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் இதுவரை கொடுக்கப்பட்ட 7 மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளா் எனக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறாா். அதிமுக இரண்டு பிரிவுகளாக உள்ளதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். ஓ.பன்னீா்செல்வம் பலமுறை சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தும் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. மக்களவைத் தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு போட்டியிடுவதில் மாற்றுக் கருத்து இல்லை. முடிந்தவரை ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட முயற்சிப்போம். பாஜகவுடன் இன்னும் இறுதிகட்ட உடன்பாடு எட்டப்படவில்லை என்றாா் புகழேந்தி.