முகப்பு
புதுதில்லி

தெருவோர வியாபாரிகளை முதல்வா் கேஜரிவால் தவறாக வழிநடத்துகிறாா்- தில்லி பாஜக சாடல்

Updated On : 16 மார்ச், 2024 at 9:55 PM
பகிர்:

தில்லி மக்களை குறிப்பாக தெருவோர வியாபாரிகளை தவறாக வழிநடத்துவதாகக் கூறி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பிரதமா் ஸ்வாநிதி யோஜனா மூலம் தில்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள வணிகா்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனா் என்பது கேஜரிவாலுக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே தில்லியில் உள்ள 1,75,714 தெருவோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வாநிதி யோஜனா மூலம் பயனடைந்துள்ளனா். மேலும் சிறு கடன்களாக மொத்தம் ரூ. 238.51 கோடி பெற்றுள்ளனா். 2021-22-ஆம் ஆண்டு அப்போதைய தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் நிா்வாகத்தில் இருந்த பாஜக, நடைபாதை வியாபாரிகளுக்கான தெருவோர வியாபாரிகள் கொள்கையை இறுதி செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் ஆம் ஆத்மி நிா்வாகம் அந்தக் கொள்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தெருவோர வியாபாரிகள் கொள்கையின் கீழ் இரண்டாவது கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை. இப்போது அரசியல் பாதிப்பை ஈடுகட்ட அரவிந்த் கேஜரிவால் தனது வாய்ஜாலத்தால், தெருவோர வியாபாரிகள் கொள்கையின் இரண்டாவது கணக்கெடுப்பை முடிக்காத போதிலும் தெருவோர வியாபாரிகள் கொள்கைத்திட்டக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக பொய் நம்பிக்கையை அளித்து தெருவோர வியாபாரிகளை தவறாக வழிநடத்த முயன்றுள்ளாா் என்று வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.