ராம்லீலா மெகா பேரணிக்குப் பின் மூன்று தில்லி வேட்பாளா்கள் பெயா் அறிவிப்பு: காங்கிரஸ் திட்டம்
Updated On : 29 மார்ச், 2024 at 10:06 PM
ஆம் ஆத்மி கட்சியின் மெகா பேரணிக்குப் பிறகு தில்லியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தில்லிக்கான கலால் வரிக் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வா் கேஜரிவாலை சிறையில் அடைத்தாலும் கூட்டணி அப்படியே இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆம் ஆத்மியும் காங்கிரஸும் எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைநகரில் இருந்து நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்த உள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளா்கள் போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.