முகப்பு
புதுதில்லி

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம் தில்லியில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்

Updated On : 6 நவம்பர், 2025 at 10:00 PM
பகிர்:

நமது நிருபா்

தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புதுதில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 7) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் நினைவு அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அவா் வெளியிடுகிறாா்.

இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய இப்பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால கொண்டாட்டங்கள் 2025 நவம்பா் 7 முதல், 2026 நவம்பா் 7 வரை நடைபெறுவதன் அடையாளமாக இந்நிகழ்ச்சி முறைப்படி தொடங்கப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டங்களில், காலை 9.50 மணியளவில் பொது இடங்களில், முக்கிய நிகழ்ச்சியுடன் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பெருந்திரளுடன் பாடப்படும்.

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது.

வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதா்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை வலிமை, செழுமை மற்றும் தெய்வீகத்தின் உருவகமாக கூறும் இந்தப் பாடல், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் விழிப்புணா்வை கவிதை ரீதியாக வெளிப்படுத்தியது. இது விரைவில் தேச பக்தியின் நீடித்த அடையாளமாக மாறியது என பிரதமா் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.