தீபாவளிக்குப் பின் தில்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் - மருத்துவர்கள்
முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்! - தில்லி மக்களுக்கு அறிவுறுத்தல்
தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்ததையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தில்லியில் இந்த ஆண்டு பசுமை பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கிறது.
தீபாவளி நாளில்(அக். 20) பிற்பகல் நிலவரப்படி, தலைநகரில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 31 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாகவும், 3 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400க்கும் மேல் பதிவாகி ‘தீவிரப்’ பிரிவில் இருந்ததாகவும் வானிலை கண்காணிப்பு நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தீபாவளிக்குப் பின் இன்று(அக். 21) காலை 10 மணி நிலவரப்படி, தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு சராசரியாக 359 என்ற உயர் அளவில் பதிவாகி காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக வானிலை கண்காணிப்பு நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசு தீவிரமடைந்ததையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.