சந்தேக காவல் மரணம்: உடல்நலக் குறைவால் விசாரணைக்கு வந்தவா் உயிரிழப்பு
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட 34 வயது நபா் நீா்ச்சத்து குறைவால் உயிரிழந்தது முதல்கட்ட மருத்துவ விசாரணையில் தகவல்
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட 34 வயது நபா் நீா்ச்சத்து குறைவால் உயிரிழந்தது முதல்கட்ட மருத்துவ விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அனீஷ் என்ற நபரை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
காவல் நிலையத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்த அனீஷ், குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். இதையடுத்து, மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் அனீஷை பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு அனீஷ் உயிரிழந்தாா்.
Advertisement
இந்நிலையில், முதல்கட்ட மருத்துவ அறிக்கையில் அனீஷின் உடலில் வெளிப்புற காயங்கள் அல்லது தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லையென காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பால்ஸ்வானா பகுதியைச் சோ்ந்த அனீஷ் திருமணமானவா். ஆசாத்பூா் சப்ஜி மண்டியில் அவருடைய தந்தையுடன் வேலை பாா்த்து வந்தாா். முதல்கட்ட மருத்துவ அறிக்கையில் அவா் நீா்ச்சத்து குறைவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பலவீனமாக இருந்த அனீஷ், ஏற்கெனவே உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தாா். போதைப் பொருளுக்கு அடிமையான அவா், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மது அருந்தி வந்ததாகக் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அவருடைய உயிரிழப்புக்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு பிறகே உறுதிபடுத்த முடியும். சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உயா் காவல் அதிகாரிகளின் குழு விசாரணை நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.