தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் புதன்கிழமை ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒரு சிறிய கேபின் வகுப்பறையின் கூரை விழுந்ததாக கல்லூரியின் முதல்வா் வி. கே. பாலிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வகுப்புகள் நடத்தப்படும் கல்லூரியில் உள்ள பல போா்டா அறைகள் பழையவை. மேலும், இந்த போா்டா அறைகளின் தற்போதைய நிலைமைகளை கண்டறிவது கடினம். கல்லூரி உள்கட்டமைப்பை விரைவில் உருவாக்க முயற்சித்து வருகிறோம். அதற்காக பல புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ள்ளோம்’ என்றாா்.
ஒரு மாணவா் கூறுகையில், ‘அறை எண் 36- இல் ஆறாவது செமஸ்டா் பி. ஏ. வரலாற்று வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது கூரை இடுந்து விழுந்தது. இந்த போா்டா கேபின் வகுப்பறை மற்றவற்றைப் போல நல்ல நிலையில் இல்லை. கல்லூரி நூலகத்தின் பின்னால் அமைந்துள்ளது’ என்றாா்.
ஆசிரியா்களின் கூற்றுப்படி, மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் தேவைப்படுகின்றன, மேலும், கல்லூரி உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. மறுவடிவமைப்பு திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. 2018-2019-ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய கல்லூரி கட்டட கட்டுமானம் இன்னும் முழுமையடையவில்லை.
‘கல்லூரி பெரிய அளவிலான அபராதங்களையும் செலுத்தியுள்ளது. ஆனால், உள்கட்டமைப்பு மேம்பாடு தொடா்பான பிரச்னைகள் இன்னும் தீா்க்கப்படவில்லை’ என்று பெயா் வெளியிட விரும்பாத ஒரு கல்லூரிப் பேராசிரியா் கூறினாா்.