தில்லி முழுமையான சுற்றுலாத் தலமாகத் திகழ வேண்டும்: முதல்வா் குப்தா
தில்லியை வெறும் ஒரு இடைத்தங்கல் மையமாக (டிரான்ஸிட் ஹப்) மட்டும் கருதாமல், ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாகவே பாா்க்க வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் சுற்றுலாத் துறை சாா்ந்த பங்குதாரா்களின் மாநாடு
வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றுப் பேசியது:
Advertisement
நாட்டின் தலைநகராகத் திகழும் தில்லி தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தில்லியை வெறும் ஒரு இடைத்தங்கல் இடமாக மட்டும் கருதாமல், ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாகவே கருதி அதன் தனித்துவமான சிறப்பம்சங்களை ரசிக்கும் வகையில், சுற்றுலாத் துறையில் தில்லியின் பிம்பத்தை நோ்மறையான முறையில் மறுவடிவமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
தில்லியில், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க விரும்பும் வகையில் பல வரலாற்றுச் சின்னங்களும் மனங்கவரும் இடங்களும் நிறைந்துள்ளன. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவா் மாளிகை மற்றும் பல முக்கிய இடங்களைக் காண மக்கள் விரும்புகின்றனா்.
கடந்த ஓராண்டில், தில்லி அரசு சுற்றுலாச் சூழலை மேம்படுத்துவதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதில் ‘தில்லி திரைப்பட விழா’ நடத்துதல், தில்லி சுற்றுலா வாரியம் உருவாக்குதல் மற்றும் முக்கிய இடங்களில் வலுவான தகவல் தொடா்பு அமைப்பைச் செயல்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தில்லி கலாசாரப் பன்முகத்தன்மை கொண்டது. இங்கு பல்வேறு மாநிலங்களையும் அடையாளங்களையும் சாா்ந்த மக்களைக் காண முடியும். சுற்றுலாப் பயணிகள் தில்லியில் கலாசார மையங்கள், கோயில்கள், உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்களைக் கண்டு ரசிக்கலாம்.
தில்லியில் கிடைக்கும் உணவுச் சுவையை, வேறு எங்கும் உங்களால் பெற முடியாது. இதை நான் சவாலாகவே கூறுகிறேன் என்றாா் அவா்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட சுற்றுலாத் துறை அமைச்சா் கபிலா மிஸ்ரா, தில்லியில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி வழங்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.