புலிப்பால் நாவினால் சுட்ட வடு
புலிப்பால் நாவினால் சுட்ட வடு - எஸ்.கலியபெருமாள்; பக். 265; ரூ.350; அறம் பதிப்பகம், ஆரணி - 632316; 91507 24997.
பேராசிரியர், கேப்டன், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்ட நூலாசிரியரின் சுயசரிதம் இது. அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ரா. என எத்தனையோ தலைவர்கள் சாதியக் கட்டமைப்பைத் தகர்க்க முயன்றாலும், சமூகத்தின் அடித்தளத்தில் அப்பியிருக்கும் அழுக்கை இன்னும் துடைக்க முடியவில்லை என்று நூலில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆதிதிராவிட சமூகத்தில் பிறந்த நூலாசிரியர், தடைகளை உடைத்து பட்டங்களைப் பெற்றதும், தேசிய மாணவர் படையில் கேப்டன் பொறுப்புக்கு உயர்ந்ததும், பேராசியராகப் பல்லாயிரக்
கணக்கான மாணவர்களை உருவாக்கியதும் தனி மனிதனின் சாதனை என்பதைத் தாண்டி, சமூகத்தின் வெற்றியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இளம்வயதில் இருந்து எதிர்கொண்ட சாதியப் பாகுபாடுகள், 80 வயதைக் கடந்த பிறகும் மறையா தழும்பாக மாறியிருப்பதைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
பல்லி, பாம்புகளைக் கூட கடவுள் என வணங்கும் சமுதாயம், சக மனிதர்களை ஓர் உயிராகக் கூட கருதாதது ஏன் என அவர் எழுப்பும் கேள்வி, மானுடத்தின் மற்றொரு முகத்தை துகிலுரிக்கிறது.
கீழவெண்மணி படுகொலை முதல் வட இந்தியாவில் ஆதிதிராவிட சிறுமி எரியும் நெருப்பிலிட்டு கொல்லப்பட்டது வரை சமூகத்தின் அவலங்கள் அனைத்தையும் தன் வரலாற்றுக்கிடையே பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சுய சரிதை என்பதைத் தாண்டி சுயநலமிக்க சமுதாயத்தின் களங்கங்களைச் சொல்லும் சரிதையாக வெளியாகியிருக்கிறது இந்த நூல்.