சித்தர் ஞானம்
சித்தர் ஞானம் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக். 400; ரூ.450; பிரெய்ன் பேங்க், சென்னை - 17; ✆ 98410 36446.
தமிழ்நாட்டை 'சித்தர்களின் தேசம்' என்று குறிப்பிடுவார்கள். பதினெண் சித்தர்களும் இங்கு தோன்றியுள்ளனர். அவர்களில் திருமூலர், அகத்தியர், தேரையர், இடைக்காடர் உள்ளிட்ட 20 பேர், அவர்கள் இயற்றிய குறிப்பிட்ட பாடல்கள் குறித்து இந்நூல் விவரிக்கிறது.
'தத்துவஞானிகள், துறவிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பன்முகத் திறன் பெற்றவர்களாகவும் உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தும் வல்லமை உடையவர்களாகவும் சித்தர்கள் இருந்துள்ளனர். பலர் சமூகத்தின் மையத்தில் இல்லாமல் தனித்தும் வாழ்ந்துள்ளனர்' என்று சித்தர்களின் பாடல்களின் வழியாகவே வெளிப்படுகிறது என்பதை நூல் பதிவு செய்துள்ளது.
சித்தர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தெளிவின்றி ஓரளவுக்குத்தான் கிடைக்கின்றன. அவற்றை மிகுந்த கவனத்துடன் இந்த நூல் பதிவு செய்திருப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு எளிமையான விளக்கமும் தரப்பட்டுள்ளது.
நவீன சித்தர்கள் என்று பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், வள்ளலார், பாரதியார், வேணுகோபால சுவாமிகள், பால கணபதி, காஞ்சி மாமுனிவர் ஆகியோரையும் இந்நூல் வகைப்படுத்துகிறது. 'தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா', 'காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்று அனைத்துடனும் பாரதியார் ஒன்றிப்போனார். 'காயமே இது பொய்யடா' என்ற கருத்திலிருந்து விலகி 'உடலினை உறுதி செய்' என்று பாரதியார் கூறியதால், ' சித்தர்களில் இவர் ஒரு தனி வகை' என்று பாரதியாரை நூலாசிரியர் குறிப்பிடுவது மிக்கப் பொருத்தமே. படித்து பாதுகாக்க வேண்டிய நூல் இது.