மற்றுமொருமுறை மகாபாரதம்
மற்றுமொருமுறை மகாபாரதம் - சத்யதேவ்; பக்.216; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044-2434 2810.
ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை உள்ளடக்கிய மகாபாரதத்தை வியாசர் எழுதினார். மகாபாரதம் படிக்கும்போது, மனதில் எழும் தர்க்கரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், அக்கால சரித்திரத்தை மனதத்துவ நாவலைப் போல நாடக வடிவில் சுவையாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.
பாண்டவர்கள், அம்பை, அரவான், விகர்ணன், யுயுத்ஸூ, சஞ்சயன், விதுரன், நகுலன், அசுவத்தாமன், யமன், சகாதேவன், ஏகலைவன் முதலியோர் நிகழ்த்தும் தனிமொழி உரைகள் நூலை நன்றாகப் படிக்கத் தூண்டுவதுடன், அறிந்திராத அதிசயத் தகவல்களைத் தருகின்றன.
சகாதேவனின் ஆற்றல், சகுனியை அழிப்பது போன்றவை சுவாரசியமாகவே செல்கிறது. கௌரவர்களில் ஒருவர் கூட நல்லவர்கள் இல்லையா என்று திரௌபதி எழுப்பும் கேள்விகளைப் படிக்கும்போது மனம் நொறுங்குகிறது.
18 கட்டுரைகளாக இடம்பெற்றிருக்கிறது. இதனை நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான சுருக்க வடிவம் என்றே கூறலாம். பெண் பாத்திரங்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி, பெண்ணியச் சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கின்றன.
இவற்றைப் படிக்கும்போது, நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நினைவுக்கு வருகின்றன. பாதுகாத்துவைத்து படிக்க ஏற்ற நூல்.