வாழ்க்கைப் பாதை
வாழ்க்கைப் பாதை - செறுகாடு (தமிழில் - நிர்மால்யா); பக். 816; ரூ. 1,130; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; ✆ 044 - 24311741.
ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளரும் பொதுவுடைமையாளருமான மறைந்த எழுத்தாளர் கோவிந்த பிஷாரடி செறுகாடு எழுதிய மலையாளத்தின் புகழ்பெற்ற தன் வரலாற்று நூலான 'ஜீவிதபாத'வின் மொழிபெயர்ப்பு. செறுகாடின் எழுத்தில் நாட்டின் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கியமான காலகட்டத்தின் கேரளப் பின்னணி எளிதில் துலங்குகிறது.
சிறுவயதுக் காலப் பதிவில், (புத்தகங்கள் தந்த) 'சாமி முன்னால் நடந்தான். தீட்டுப்படாத தூரத்தைக் கடைப்பிடித்துப் பின்தொடர்ந்து நானும் நடந்தேன்' என்றொரு வரி. இவ்வாறு நூல் நெடுகிலும் அன்றைய சமுதாயச் சூழலைப் பிரதிபலிக்கும் ஏராளமான தகவல்கள்.
மாணவனாக மகாத்மாவின் சந்திப்பை நினைவுகூரும்போது, 'கேள்விப்பட்டதைப் போன்ற மகத்துவம் எதையும் காந்தியடிகளிடம் என்னால் காண இயலவில்லை. அவதார புருஷராக அவர் காணப்பட்டதால் அபிப்ராயத்தை மறைத்து வைத்தேன்' என்கிறார் செறுகாடு.
இலக்கியப் படைப்புகள் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கானவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவரான செறுகாடின் பெரும்பாலான படைப்புகள் மக்கள் இலக்கியங்களே! மருமக்கத்தாய வீட்டின் வாரிசான அவர் வாழ்வின் ஒரு தருணத்தை எளிய மனிதனாகச் சொல்கிறார்: 'செறுகாட்டுக் குடும்பத்தின் குலப்பெருமையை உருக்கி எடை போட்டு விற்கப் போகிறேன்'.
அணிந்துரையில் கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு குறிப்பிடுவதைப் போலவே, நாவலாக வாசிக்கத்தக்க இந்தத் தன் வரலாறு, பிற்பாடு கேரளத்தின் குறிப்பாக, இடதுசாரி இயக்கத்தின், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறாகவும் மாறியுள்ளது.
தொடங்கினால் படித்து முடித்துவிட வேண்டும் என்கிற அளவுக்கு ஒரு சமூக நாவலைப் போலவே விறுவிறுப்பாகச் செல்கிறது முழு நூலும். இந்தத் தன் வரலாற்று நூல் வெளிவந்த பின் இரு ஆண்டுகளே வாழ்ந்திருக்கிறார் செறுகாடு. எதிர்வரும் காலத்தில் அந்தக் காலத்தையும் எழுதி இணைத்தால் இந்த நூலும் அவர் வாழ்வும் முழுமை பெறும்.