சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
இக்கோயிலில் உள்ள ஸ்ரீ ராமபிரானுக்கு காலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீஆஞ்சநேயருக்கு பால், தயிர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், களபம், சந்தனம், எலுமிச்சை சாறு, மாதுளைச் சாறு, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
காலை 7 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
பின்னர், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த அபிஷேகத்தை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அனுமன் ஜயந்தியையொட்டி, காலை 10 மணி முதல் கோயில் கலையரங்கம், எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, துவாரகை கிருஷ்ணன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், லட்டு, பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு ஸ்ரீராம ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் சார்பில் பஜனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீராமபிரானுக்கும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கும் புஷ்பாபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சுசீந்திரத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில்களின் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தலைமையில், ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்ட் செய்திருந்தது.