திருப்பதி மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 17-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திவ்ய தரிசனம் செய்யப் பக்தர்கள் நடைபாதையாக வருகின்றனர். அளவுக்கு அதிகமாகப் பக்தர்கள் நடந்து வருவதாலும், திவ்ய தரிசன பக்தர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் திவ்ய தரிசனத்திற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே திவ்ய தரிசனத்துக்கு அனுமதி சீட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குமேல் நடந்து வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாமி தரிசனம் செய்வதற்கு நேரம் அதிகமாகும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த முடிவை தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.