பரிகாரத் தலங்கள்

கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளைச் சேர்த்துவைக்கும் திருச்சாத்தமங்கை

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதிகளையும் மனமொத்த தம்பதிகளாக மகிழ்ச்சியாக சேர்ந்து வாழவைக்கும் தலம் திருச்சாத்தமங்கை.

என்.எஸ். நாராயணசாமி

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதிகளையும் மனமொத்த தம்பதிகளாக மகிழ்ச்சியாக சேர்ந்து வாழவைக்கும் தலம் திருச்சாத்தமங்கை. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த திருநீலநக்க நாயனாரையும் மனைவி மங்கையர்க்கரசியையும் இத்தல இறைவன் சேர்த்துவைத்து அருள்புரிந்தது இத் தலத்தில்தான். காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் இது 81-வது தலம்.

இறைவன் பெயர்: அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர்
இறைவி பெயர்:  மலர்க்கண்ணம்மை, உபயபுஷ்பவிலோசனி
பதிகம் : திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் உள்ளது

எப்படிப் போவது?

  • நன்னிலம் - திருப்புகலூர் - திருமருகல் - நாகூர் சாலையில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகல் தாண்டியவுடன் நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன், "கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டிக் கல் உள்ளது. அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருப்புகலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர்.

  • நாகப்பட்டினம் - நாகூர் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்து ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர்.

ஆலய முகவரி
அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை,
சீயாத்தமங்கை அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 702.

ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் திருசாத்தமங்கை. சிவத்தொண்டு ஆற்றிய திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியின் உருவச்சிலைகள் மகா மண்டபத்தில் உள்ளன.

திருநீலநக்கர், மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் வழிபடுவது வழக்கம். ஒருமுறை, மனைவியுடன் திருக்கோயிலுக்கு நீலநக்கர் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்தியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றினார். மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர், மனைவி மீது கடும் கோபம் கொண்டார். மேலும், அதனை தகாத செயலாகக் கருதி, மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார்.

மங்கையர்க்கரசி, ஆலயத்திலேயே தங்கி, இறைவனிடம் தினமும் வேண்டினார். மங்கையர்க்கரசியின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட நினைத்த இறைவன், தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நீலநக்கர் கனவில் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர, லிங்கத் திருமேனியில் இதர பகுதிகள் முழுவதும் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

விடிந்தும் ஆலயத்துக்கு ஓடிவந்த நீலநக்கர், இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கிய அதேநேரம், மனைவிக்காக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார். மனம் திருந்தி நீலநக்கர், மங்கையர்க்கரசியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

இவ்வாறு நீலநக்கரையும் அவரது மனைவியையும் சேர்த்துவைத்த இறைவன், இந்நாளிலும் மன வேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரைச் சேர்த்துவைக்கும் பெருமானாகத் திகழ்கிறார். பிரிந்து வாழும் கணவன், மனைவி இருவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ வந்து இத்தல இறைவனை மனமுருகி வழிபட நல்லதே நடக்கும்.

இத்தலம், தற்போது சீயாத்தமங்கை என்று அழைக்கப்படுகிறது. ஊரின் பெயர் சாத்தமங்கை. இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. உயர்ந்த சுற்று மதிலை உடைய பெரிய இந்த ஆலயம், சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் இரண்டுக்கும் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் தீர்த்தக் குளம் உள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதி சந்திரதீர்த்தம் என்றும், மற்றொரு பகுதி சூரியதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தீர்த்தக் குளத்தின் கரையில் சித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.

சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான முற்றம் உள்ளது. வெளிச்சுற்றில் வலம்வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய நிலையில் உள்ள சனி பகவான், சப்தகன்னியர், பைரவர், நவகிரகங்கள், மகாலிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் உள்ள தலவிருட்சமான கொன்றை மரத்தின் அடியில் விநாயகர், லிங்கத் திருமேனிகள் உள்ளன.

உள்வாயிலைக் கடந்து முன்மண்டபதுக்கு வந்தால், வள்ளி - தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி மங்கையர்க்கரசி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படியேறி வந்தால், உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபையில் மணிவாசகர், அம்பலக்கூத்தர் மற்றும் அம்மை சிவகாமியுடன் காட்சி தருகிறார்.

மூலவர், கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்புமூர்த்தியான இந்த அயவந்தீஸ்வரர் பாணம் முழுவதும் கொப்புளம்போலக் காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிற்பக் கலைத்திறனுடன் அமைந்துள்ளது. கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் மற்றும் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கெளரி லீலை உருவத் திருமேனியைப் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். வெளி மண்டபத் தூண் ஒன்றில், வாலில் மணியுடன் ஆஞ்சநேயர் காணப்படுகிறார். அருகில் மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் காணத்தக்கது.

அம்பாள் சந்நிதி, அருகிலேயே தனிக்கோயிலாக உள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படியேறிச் சென்றால், கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே, அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

திருஞானசம்பந்தர், திருநள்ளாறு தலத்தில் இறைவனை வணங்கிய பிறகு திருச்சாத்தமங்கைக்கு எழுந்தருளினார். அவரை வணங்கி வரவேற்றார் நீலநக்கர். பின்னர் இருவரும் அயவந்தி ஆலயத்தை அடைந்து, இறைவனை வழிபட்டு இல்லம் திரும்பி உணவருந்தினர். திருஞானசம்பந்தர், நீலநக்கர் வீட்டிலேயே தங்கினார். மறுநாள் காலை ஆலயத்துக்குச் சென்ற சம்பந்தர் ஒரு பதிகம் பாடினார்.

பதிகத்தின் 2-வது மற்றும் 11-வது திருக்கடைக் காப்பில் திருநீலநக்க நாயனாரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.

பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்திய மர்ந்தவனே.

நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி
புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.

வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.

வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே
சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.

இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.

பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.

கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.

*

நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்தமங்கை…
நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கை…
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்தமங்கை…
குளிர்ச்சி பொந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சாத்தமங்கை…
திருநீலநக்க நாயனார் போற்றி வழிபடும் அயவந்தி என்னும் திருக்கோயில்…
திருநீலநக்கருடைய பிறந்த ஊர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை…
என்று, சம்பந்தர் தனது பதிகத்தில் இந்த ஊரைப் பலவாறாகச் சிறப்பித்துள்ளார்.

இந்தப் பதிகத்தைப் பாடியவர் மதுரை பொன். முத்துக்குமரன்

</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/256454888&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p><h3 align="JUSTIFY"><strong>courtesy : www.shivatemples.com</strong></h3><p align="JUSTIFY">அடுத்த வாரம் சந்திப்போம்.</p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT