செய்திகள்

சதாசிவ பிரும்மேந்திரரும், சிருங்கேரி மகானும்..

மாலதி சந்திரசேகரன்

சுமார் 220 வருடங்கள் முன்பு பரபிரம்மத்துடன் கலந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். ஸ்ரீ சதாசிவர் அப்போதைய காஞ்சி ஆசார்யாரான (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்தாராம். 

சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வந்த ஸ்ரீ ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போனாராம். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து போகிகளிடம் காரணம் கேட்டாராம். போகிகள் தாம் பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புறம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொன்னார்களாம். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லுவது முறையல்ல என்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதும் ஆச்சார்யார் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.

நெரூரை அடைந்த ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு பிரம்மேந்திரது அதிஷ்டான வளாகத்தினுள் சென்ற பொழுது, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் எந்த விதத்திலும் தன்னுடன் தொடர்பு கூடாது, எல்லோரும் திருமதிலுக்கு வெளியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்று விட்டாராம். அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது அதிஷ்டானத்தின் முன்பு தியானத்தில் அமர்ந்து விட்டாராம். மூன்று நாட்கள் இவ்வாறாக இருந்திருக்கிறார். காலை-மாலையில் காவேரிக்  கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம். பக்தர்கள் எல்லோரும் திருமதிலுக்கு வெளியே அன்ன  ஆகாரமின்றி ஆசார்யாரது பிக்ஷைக்குப் பின்னரே உணவு எடுத்துக் கொள்வதாக உறுதியெடுத்துக் காத்திருந்தார்களாம். மூன்றாம் நாள் இரவு மதிலுக்குள்ளிருந்து இருவர் பேசிக்கொள்வது காதில் கேட்டதாம். 

ஒரு குரல் ஆசார்யாரது குரலாக இருப்பதை உணர்ந்தனர், இன்னொன்று சதாசிவ பிரம்மத்தினுடைதாக இருக்கலாம் என்று நினைத்து, மறுநாள் ஆசார்யார் சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனராம்.

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீ ஸ்வாமிகள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்கு தாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.

இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழித்தும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்தவருக்கு அனுக்ரஹித்துள்ளார் சதாசிவர். மேற்சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய  
45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.

பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய

பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய.

பரமசிவேந்திரர் என்னும் மஹானின் கரகமலத்தால் உண்டானவரும், [இங்கு சொல்லப்பட்டிருக்கும் பரமசிவேந்திரர் காமகோடி பீடத்து யதி, சதாசிவருக்கு ஸன்யாசம் அளித்தவர்] நமஸ்கரித்தவர்களுக்குப்  
பரதத்துவத்தை அருளுபவரும், கால்களில் தாமரையை ஜெய்த்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே

சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமூகம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.

ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே

குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

யதிச்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை  நமஸ்காரம் செய்கிறோம்.

ந சாஹமதி சாதுரீ ரசித சப்த ஸங்கைள் ஸ்துதிம்

விதாது மபிச க்ஷமோ நச ஜபாதி கேப்யஸ்திமே

பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேது சூன்யாம் விபோ

ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகினாம் ஸத்வரம்

மிகச் சாதுர்யம் நிரம்பிய சப்தங்களால் ஸ்துதி செய்யும் சாமர்த்யம் எனக்கில்லை. ஜபம் முதலியவை செய்வதற்கும் பலமில்லை. பலம் உள்ளவர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ சதாசிவரே! சமர்த்தரே!,  
யோகிகளில் ஸ்ரேஷ்டரே!, உமது அவ்யாஜ கருணையை சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.

ஸ்தீகார்ச்சன ப்ரீத ஹ்ருதம்புஜாய பாகாப்ஜ சூடா பரரூப தர்த்தே

சோகாப ஹர்த்ரே தரஸாநதானாம்பாகாய புண்யஸ்ய நமோயதீசே

கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனைத் தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்கு விரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.

இந்தப் பாடல் நெரூரில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருக்கும்...

எத்தனையோ மகான்கள் பிறந்த இம்மண்ணில் நம்முடைய ஜனனமும் நடந்திருக்கிறது என்பது எத்தனை ஸ்ரேஷ்டமான சமாசாரம். 
 
- மாலதி சந்திரசேகரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT