சென்னை - திருத்தணி செல்லும் சாலை அருகே வடாரண்யம் எனப்படும் திருவாலங்காடு திருத்தலம் அமைந்துள்ளது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. இரத்தின சபை என்று போற்றப்படுகிறது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய ஊர்த்தவ தாண்டவமே முதன்மையானத் தாண்டவம் ஆகும்.
சைவ சமய குரவர்களாக சம்பந்தர் அப்பர், சுந்தரர் மூவராலும் போற்றப்பட்ட சிறப்பு மிகுத்தலம் இது!
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு ஆடவல்லான் பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அம்மையார் அருளிய மூத்தத்திருப்பதிகங்கள் சிறப்பானது. காரைக்காலம்மையார் தலையால் நடந்துவந்து நடராஜப் பெருமானாகிய அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் திருவடிக்கீழ் இருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்த பெருமை பெற்றது இத்தலம் மார்கழி திருவாதிரை நாளில் ஆடவல்லான் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் சிறப்பானது. இத்தலத்தில் அருள்புரியும் அம்பாள் வண்டார்குழலியம்மை எனப் போற்றப்படுகிறார்.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருவாலங்காடு திருத்தலத்தில் சென்னை - திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் உழவாரப் பணிக் குழுவினரால் திருக்கோயில் மற்றும் திருக்குளம் ஆகியவற்றில் உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது.