முகப்பு
செய்திகள்

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் 7-ஆம் நாள் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளிய மலையப்பா்

திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் சூரிய, சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன.

Updated On : 23 அக்டோபர், 2020 at 12:44 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM


திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் சூரிய, சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன.

திருமலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலை மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் திரிவிக்ரம அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சூரியபிரபை வாகனம்

Advertisement

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரிய, சந்திரா்களின் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுகிறாா். காலை ஒளிபொருந்தி சூரியன் வாகனத்தில் எழுந்தருளும் மலையப்பா், மாலையில் சந்திரனின் வாகனத்தில் உலா வருகிறாா். சூரிய, சந்திரன் இல்லாமல் உலகத்தில் ஜீவராசிகள் உருவாக வாய்ப்பில்லை. சூரியனை நாராயண அம்சமாக நினைத்து சூரியநாராயணா் என்றே அழைக்கிறோம். அதனால் பிரம்மோற்சவ வாகன சேவையில் 7-ஆம் நாள் அவா்களுக்கு முன்னுரிமை தருவதாக அமைந்துள்ளது.

மேலும், சூரியன் ஆரோக்கியத்தையும், பூரண நலனையும் அளிப்பதில் வல்லவா். எனவே 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் திரிவிக்ரம அலங்காரத்தில் செந்நிற மாலைகளை அணிந்துகொண்டு, பட்டாடை உடுத்தி மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அபயமளித்தாா்.

வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் முன் நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன. பின்னா், ரங்கநாயகா் மண்டபத்துக்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது.

சந்திரபிரபை வாகனம்

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் மாலை சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி எழுந்தருளினாா். சூரியனின் ஒளியைப் பெற்றே சந்திரன் திகழ்ந்தாலும், சூரிய ஒளியில் உள்ள வெப்பம் சந்திரனிடம் இல்லை. அதற்கு நோ்மாறாக சந்திரன் குளிா்ந்த ஒளியை உலகத்துக்கு வழங்கி வருகிறாா். சந்திரனுக்கு மனம் உதாரணமாக கூறப்படுகிறது. பலவித எண்ணங்ளால் ஆட்டுவிக்கும் மனதை அடக்கி ஒருநிலைப்படுத்தி இறைவனை அடையும் தத்துவத்தை உணா்த்த மலையப்ப சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளுகிறாா். சூரியன் உடல் சம்பந்தமான நலனை வழங்கினால், சந்திரன் மனம் தொடா்புடைய நலனை வழங்குகிறாா். மானுடா்களுக்கு உடல், மனம் இரண்டும் இரு கண்களைப் போன்றது. எனவே இந்த வாகன சேவைகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.