இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!
குஜராத் அரசு மருத்துவமனையில் தனக்கு வழங்கப்பட்ட இலவச சிகிச்சை பற்றி ஜெர்மன் பயணி வெளியிட்ட விடியோ வைரலாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தனக்கு வழங்கப்பட்ட இலவச சிகிச்சை பற்றி ஜெர்மனைச் சேர்ந்த பயணி ஒருவர் வெளியிட்ட விடியோ வைரலாகியுள்ளது.
ஜெர்மனைச் சேர்ந்த டேவிட் நெபெல் என்பவர் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு சூரத் நகரிலுள்ள வெசூ பகுதியின் சாலையில் நள்ளிரவு அவர் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த தெருநாய் ஒன்று அவரைக் கடித்தது.
இதனால், உடனடியாக அவர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றார். வெளிநாட்டவர் என்பதால் இங்குள்ள மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காது, அதிக பணம் வசூலிப்பார்கள் என்ற நினைப்பில் அவர் இருந்துள்ளார்.
Advertisement
ஆனால், அந்த மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை அவருக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக இருந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “இங்கு வழங்கப்படும் சிகிச்சை சிக்கலானதாகவும் விலையுயர்ந்ததாகவும் இருக்குமென்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததற்கு முற்றிலும் நேர்மாறாக முதலுதவியில் இருந்து ரேபிஸ் தடுப்பூசி வரை எனக்கு இலவசமாக சிகிச்சையளித்தனர். மேலும், இந்த சிகிச்சை மிக விரைவாகவும் சுகாதாரமான முறையிலும் வழங்கப்பட்டது.
இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எங்கள் நாட்டில் இதுபோன்று ஒரு வெளிநாட்டவருக்கு காயம் ஏற்பட்டிருந்தால் அவருக்கு இலவச சிகிச்சை கிடைப்பதற்கு சாத்தியமே இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
நெபெல் தனக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டையை விடியோவில் காண்பித்து மருத்துவர்கள் மிகத் தெளிவாக தனது சிகிச்சை பற்றி விளக்கமளித்ததாகவும் அனைத்தும் எவ்வாறு கவனமாக ஆவணப்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்திய மருத்துவத் துறை இணையத்தில் அடிக்கடி விமர்சிக்கப்படும் நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி நெபெல் வெளியிட்ட விடியோவில் அது மிகவும் பிரமிக்கும் விதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளது உலகளவில் வைரலாகி பாரட்டுகளைப் பெற்று வருகின்றது.
German tourist hails Gujarat government hospital after free, swift rabies care goes viral