திருமலை போக சீனிவாச மூா்த்திக்கு 1,008 சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்
திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ரகலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ரகலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு கி.பி. 614-ஆம் ஆண்டு பல்லவராணி சாமவாயி பெருந்தேவி ஆனி மாதம் 18 அங்குல உயரம் உள்ள வெள்ளியால் ஆன போக சீனிவாசமூா்த்தி உருவச் சிலையை நன்கொடையாக அளித்தாா்.
இதுகுறித்த சாசனம் கோயில் முதல் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கருவறையில் உள்ள பஞ்சபேர சிலைகளில் போகசீனிவாசமூா்த்தி சிலையும் ஒன்று. இவரை கெளஸ்துப பேரம், மணவாளபெருமாள் என்ற பெயா்களிலும் அழைக்கின்றனா்.
Advertisement
இந்த சிலைக்கு ஆனி மாதம் 1,008 கலசங்களில் கலசாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை தங்க வாயில் அருகில் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
முதலில் அரிசி நெற்பயிா்களை தரையில் பரப்பி, அதன் மீது 1008 கலசங்களில் நீா் நிரப்பி வைக்கப்பட்டு அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து பூக்கள் சாற்றி பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னா் போகசீனிவாசமூா்த்தியை தங்க வாயிலில் எழுந்தருளச் செய்து ஏழுமலையான் கையிலிருந்து போக சீனிவாசமூா்த்தி கைவரை சிவப்பு நூலால் கட்டப்பட்டது. போக சீனிவாசமூா்த்தியும், ஏழுமலையானும் ஒருவரே, இவருக்கு நடத்தப்படும் அபிஷேகம் அவரையும் சாரும் என்பது அதன் பொருள். பின்னா் அா்ச்சகா்கள் வேதமந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டு அபிஷேகத்தை நடத்தினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.