தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது!
தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது தில்லை கோவிந்த ராஜப் பெருமாள் கோயில். இங்கு மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவரான தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் எழுந்தருளியுள்ளனர்.
மூலவர் சாத்விக விமானத்தின் கீழ் யோக சயனத்தில் உள்ளார். புண்டரீகவல்லி தாயார் சன்னதி நிருத்த சபை அருகே தனியே ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் உள்ள கோயில் உள்ளது. தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திருப்பணியையொட்டி, கோயிலின் விமானராஜ கோபுரங்கள், மகாமண்டபம் ஆகியவை 30 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அஷ்ட பந்தன மகா சம்ரோக்ஷணம் நவ.3-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப்பந்தலில் அக்.30-ம் தேதி வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு விஷ்வக்சேன ஆராதனம், அகல்மஷ ஹோமம்ஸ பஞ்சகவ்யி பிராசனம் மற்றும் வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
கோவில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினர் சம்ப்ரோஷணத்திற்க்கான ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழுவினர் ஜே. சுதர்சனன், ஆர்.சௌந்தரராஜன் டி.திருவேங்கடவன் மற்றும் பொது தீட்சிதர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.
The Yagasalai Puja began on the occasion of the consecration of Thillai Govindaraja Perumal.
இதையும் படிக்க: மணிப்பூரில் பெண் உள்பட 2 தீவிரவாதிகள் கைது!