மகாத்மா ஜோதிராவ் புலே - க.ஜெயச்சந்திரன்; பக்.88; ரூ.90; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.
மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் ஜோதிராவ் புலே. 1827 இல் பிறந்த அவர், அனைத்துச் சாதியிலும் உள்ள ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 170 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளைத் திறந்து நடத்தியவர். அதற்காக அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என்றபோதிலும் மனம் கலங்காமல் தொடர்ந்து தனது பாதையில் நடைபோட்டவர்.
விதவைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முடி
திருத்தும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்தார்.
1880 ஆம் ஆண்டு பம்பாயில் ஆலைத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஜோதிராவ் புலேயும் ஒருவர். ஜோதிராவின் துணைவியார் சாவித்திரிபாய் ஜோதிராவின் எல்லா சமுதாயச் செயல்பாடுகளுக்கும் துணையாக இருந்திருக்கிறார்.
இன்றைய நாளில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களுக்கு அந்நாளில் விதையிட்டு வளர்த்தவர்களில் ஒருவர் ஜோதிராவ் புலே. அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக, தெளிவாக இந்நூல் எடுத்துச் சொல்கிறது.