சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஏ அணி.
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது.
லீக் முடிவில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியும் 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருந்த இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். கவாஜா 76, பர்ன்ஸ் 41 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.
பிறகு ஆடிய இந்திய ஏ அணி 142 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் - சாம்சன் ஆகிய இருவரும் கடைசி வரை பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள். குர்கீரத் சிங் 87, சாம்சன் 24 ரன்கள் எடுத்தார்கள். 6 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது இந்தியா ஏ அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.