அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்துப் போட்டி: நெல்லையில் நாளை தொடக்கம்
அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்துப் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை (பிப்.25) தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான
அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்துப் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை (பிப்.25) தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் ரா.சந்திரசேகரன் திங்கள்கிழமை கூறியதாவது:
40 ஆவது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புதன்கிழமை (பிப்.25) தொடங்கி சனிக்கிழமை (பிப்.28) வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அகநிலை தணிக்கை அலுவலர் எஸ்.எம்.ஜெ.ராசகுமார் தலைமை வகிக்கிறார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். நிறைவு விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மின்வாரியத்தின் இயக்குநர் பெ.அண்ணாதுரை வரவேற்கிறார். செயலர் எஸ்.சின்னராஜிலு தலைமை வகிக்கிறார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் பரிசுகளை வழங்கிப் பேசுகிறார் என்றார் அவர்.
பேட்டியின்போது விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய துணைத் தலைவர் ஆர்.பஷீர்அகமது, மேற்பார்வை பொறியாளர் கே.செல்வகுமார், செயற்பொறியாளர் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க திட்ட அலுவலர் கருப்பசாமி, கணேசன், முத்துராமன், ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.