ஊக்கமளிக்கும் மருந்தே விருது
உலக மகளிர் தினம் மார்ச் 8-இல் கொண்டாடப்பட்டது. அன்று மட்டுமல்ல; மார்ச் மாதம் முழுவதும் மகளிர் தின விழாக்கள் எனக் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
உலக மகளிர் தினம் மார்ச் 8-இல் கொண்டாடப்பட்டது. அன்று மட்டுமல்ல; மார்ச் மாதம் முழுவதும் மகளிர் தின விழாக்கள் எனக் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் கோவை வி.எல்.பி. ஜானகி அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐம்பது பெண்களுக்கும், திருச்சி நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பெண்களுக்கும் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த விருதுகளைப் பெற்றவர்களில் சிலரிடம் பேசியபோது:
மு.மயூரி வெங்கடேஷ், நடன ஆசிரியர், கோவை
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக் கதையானது கடின உழைப்பு, உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் விளைவாக அமைந்தது. அவர்களின் வாழ்க்கைப் பயணம் பல சவால்களையும், தடைகளையும் கடந்து வந்துள்ளதைக் காட்டுகிறது. அந்தச் சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றியை அடைந்துள்ளனர். பெண்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டால், அவர்கள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை இதுபோன்ற விழாக்கள் உறுதிப்படுத்துகின்றன.
கல்வி மூலம் பெண்கள் தங்கள் இடத்தை உறுதியாகப் பிடித்து வருகின்றனர். இதுபோன்ற விருதுகள் பெண்களை சமூகம் மதிப்புடன் பார்க்கவும், அவர்களுக்கு மேலும் பல சாதனைகளை நோக்கி முன்னேறவும் உதவுகிறது. அதேநேரத்தில் மற்ற பெண்களும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற ஊக்கமளிக்கிறது.
டினுஷா காயத்ரி, பாடலாசிரியர், இலங்கை
நாடு கடந்து சாதனை புரிபவர்களை பாராட்டும் நோக்கத்தில் பெண்களுக்கு விருதுகளை வழங்குகின்றனர். ஒரு விருது என்பது வெறும் நினைவுச் சின்னம் அல்ல; அது நம்முடைய உழைப்பை உலகம் உற்று கவனித்துக் கொடுக்கின்ற அங்கீகாரம். அப்படிப்பட்ட விருதை பெறுவதற்காக விமானச் செலவையும் பொருள்படுத்தாமல், நானும் என் அப்பா சுந்தரராஜனும் இலங்கை நீர் கொழும்பு பகுதியில் இருந்து வந்துள்ளோம்.
விருதாளர்களில் சிலர் சமூக சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர்கள். சிலர் தொழில் முனைவோராகத் தங்கள் திறமையை நிரூபித்து மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர்கள். பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் விழாவாக மட்டுமல்லாமல், பெண்களின் மன உறுதியையும் கொண்டாடும் ஓர் அரிய தருணமாகவும் இந்த விழா அமைந்தது.
நீலா லிங்கேஷ், தன்னம்பிக்கைப் பேச்சாளர், மலேசியா
சில நேரங்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள், கடின உழைப்புக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசாகவும், பாராட்டாகவும் அமைகிறது. ஈரான் போரின் காரணமாக விமானப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டாலும், பயணத்தைத் தவிர்க்காமல், இந்த விருதை நேரில் வந்து வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய கணவர் லிங்கேஸ்வரனுடன் இங்கு வந்துள்ளோம்.
எங்களுடைய சொந்த நாட்டில் சாதனைப் பெண் விருதைப் பெறுவதைவிட, மற்ற நாடுகளில் விருது பெறுவது என்பதுதான் கெளரவம் என உணர்கிறோம். சமூக முன்னேற்றத்துக்குப் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
நாடு கடந்தும் சாதனைப் படைக்கும் பெண்களைக் கெளரவிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டியது. இவர்களின் முயற்சிக்கு நாம் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.