இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாக பால் வான் ஆஸ் தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய ஹாக்கி அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பால் வான் ஆஸ் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகக் கருதப்பட்டது. கடந்த ஜனவரிம் மாதம் தான் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பெல்ஜியத்தில் நடந்த ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இது பற்றி அறிக்கை தராததால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பால் வான் ஆஸ் கூறும்போது, ‘என்னைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள். ஹாக்கி இந்தியாவின் செயல்திறன் இயக்குநர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், மின்னஞ்சல் வழியாக இத்தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா அல்லது சாய் அமைப்பிடமிருந்தோ (Sports Authority of India) எந்தத் தகவலும் வரவில்லை. விரைவில் என் நீக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார்கள்’ என்று தெரிவித்தார்.
ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது, பால் வான் ஆஸுக்கும் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ராவுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. போட்டி முடிந்தபிறகு நரிந்தர், ஆட்டக் களத்துக்குள் நுழைந்து வீரர்களிடம் உரையாடினார். இதனை விரும்பாத பால் வான் ஆஸ், நரிந்தரைக் களத்தை விட்டு வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர், பால் வான் ஆஸ் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இன்னும் ஒருவருடமே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் இதுபோன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டிருப்பது ஹாக்கி ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.